Saturday, March 13, 2010

கோணேசர் கல்வெட்டு


'கோணேசர் கல்வெட்டு' என்கின்ற இந்த வரலாற்று நூல், திருகோணமலையைச் சேர்ந்த கவிஞர் இராஜவரோதயம் அவர்களால் 16 ம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இது பாடல்களையும் , உரைநடைப்பகுதிகளையும் கொண்டமைந்திருக்கிறது.



அந்த நாட்களில் அரசர்கள் தங்களது திருப்பணிகள், கட்டளைகள் போன்றவற்றை சாசனங்களாகக் குறித்து வைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட சாசனத்தை ஆதாரமாகக்கொண்டு இலக்கியங்கள் உருவாக்கப்பட்டால் அது 'கல்வெட்டு' என அழைக்கப்பட்டது.


திருக்கோணேச்சர ஆலயத்துக்கு திருப்பணிகள் செய்த குளக்கோட்டு மன்னன், ஆலயம் பற்றியும், அதனை நிர்வகிப்பது பற்றியும்,கோயிற்தொழும்பாளர்கள் கடமைகள் பற்றிய செய்திகளையும் உள்ளடக்கி 'பெரியவளமை பத்ததி' என்னும் செப்பேட்டில் பொறித்து வைத்திருந்தார். அச்சாசன விடையங்களை அடிப்படையாக வைத்து அதைத் தொகுத்தும்,விரித்தும் கவி இராஜவரோதயரால் உருவாக்கப்பட்டதுதான் கோணேசர் கல்வெட்டு.


இந்நூல் மூலம் திருக்கோணேச்சரத்தின் வரலாறு, அவ்வாலயத்துக்கு குளக்கோட்டு மன்னன் செய்த திருப்பணிகள்,திருகோணமலை வன்னிமைகள் பற்றிய செய்திகள்,அக்காலத்து திருகோணமலைச் சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்கள் என்பனவற்றைப் பற்றி நாம் அறியக்கூடியதாக இருக்கிறது.


முக்கியமாக கோயில் தொழும்பு செய்வோர் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் ,அவர்களுக்கு வழங்கப்பட்ட மானியங்கள், கோணேசர் ஆலயத்துக்குரிய திரவிய இருப்பு என்பன பற்றி விரிவாகச் சொல்கிறது இந்நூல். திருகோணமலையின் வரலாற்றுத் தொன்மைக்கான ஆதாரங்களில் இந்நூல் முக்கிய இடம்வகிக்கிறது.


இணையத்தில்
PDF
வடிவில் வாசிக்க... (நன்றி நூலகம்)


பதிவின் ஒலிவடிவத்தைக்கேட்க...
Share/Save/Bookmark

Friday, March 12, 2010

வரலாற்றுத் திருகோணமலை


வரலாற்றுத் திருகோணமலை எனும் இந்நூல் திரு.கனகசபாபதி சரவணபவன் அவர்களால் எழுதப்பட்டது. பலசாசனங்களில் இருந்தும், வரலாற்று நூல்களில் இருந்தும் ஆதாரங்களைக்காட்டி எழுதப்பட்ட இந்நூல் திருகோணமலையின் வரலாற்றை போர்த்துக்கீசர் காலம்வரை ஆராய்கிறது.



இலங்கையில் திருமலைத்தமிழர் வரலாறு தொடர்பான ஆதாரங்களைப் பட்டியல்படுத்தும் இந்நூலில் திருகோணமலையின் வரலாற்றுடன் தொடர்புடைய தமிழக வரலாற்றுப் பின்னணிகள் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. திருகோணமலையின் வரலாறு, திருக்கோணேஸ்வரத்தின் தோற்றம், தென்னிந்திய அரசுகளின் எழுச்சி, குளக்கோட்டு மன்னன், திருகோணமலையில் வன்னியர்களின் ஆட்சி , திருகோணமலைச் சமூகங்களும்,தொல்மரபுகளும், வழமைகளும் என்று பல்வேறுபட்ட கோணங்களில் திருமலை வரலாற்றை ஆராய்கிறது இந்நூல்.


திருகோணமலை வரலாற்றுடன் திருகோணமலை மாவட்டத்தில் வாழும் இலங்கைத் தமிழர்கள், இந்தியத்தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லீம்கள், காப்பிரிகள்(நீக்கிரோக்கள்), பறங்கியர்கள், சீனர்கள், வனக்குறவர்கள் என்போரின் சமூக அமைப்புக்கள் பற்றியும் ஆராய்கிறது.



திருகோணமலை மாவட்டம் வன்னியர்கள் ஆட்டசிக்காலத்தில் திருகோணமலை, கட்டுக்குளப் பற்று , கொட்டியாரப் பற்று ,தம்பலகாமப் பற்று என நான்கு குறுநில ஆட்சிப் பிரிவுகளைக் கொண்டிருந்தமை பற்றிய விரிவான விளக்கத்தைத் தருகிறது இந்நூல். திருகோணமலையின் வரலாற்று ஆய்வு நூல்களைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும் சாதாரண மக்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதமாகும்.

இணையத்தில்
PDF
வடிவில் வாசிக்க... (நன்றி நூலகம்)
Share/Save/Bookmark

தமிழர் வரலாற்றின் தொன்மை சொல்லும் கந்தளாய்க் கல்வெட்டுக்கள்

கந்தளாய், திருகோணமலையில் இருந்து கண்டி செல்லும் பாதையில் நாற்பது கிலோமீற்றரில் அமைந்திருக்கும் ஊர். இலங்கையின் மிகப்பெரிய விவசாய நிலங்களைக் கொண்ட பிரதேசங்களில் ஒன்றாகக் கந்தளாயும் கருதப்படுகிறது. பண்டைய நாட்களில் கந்தளாயில் 'சதுர்வேதி மங்கலம்' என்றழைக்கப்பட்ட பிரதேசம் இருந்தது. இங்கு நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த அந்தணர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு இப்பிரதேசம் வரியில்லாமல் வழங்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்த குடியேற்றம் அளவில் பெரிதானதாகவும், அதிகாரம் கொண்டதாகவும் அமைந்திருந்தது என அறியமுடிகிறது.




கி.பி 10 ஆம் நூற்றாண்டில் சோழரது நேரடி ஆட்சி இலங்கையில் ஏற்பட்டபோது நாகநாட்டில் இருந்த( தற்போதைய வடகிழக்கு மாகாணம்) தமிழ் அரசும் அவர்களது ஆதிக்கத்துக்கு உட்பட்டது என வரலாற்றாதாரங்கள் மூலம் அறிய முடிகிறது. சோழப்பேரரசின் படையெடுப்பின் மூலம் இப்பிரதேசம் இராஜராஜனின்(கி.பி 985 - கி.பி 1014) ஆதிக்கத்தின்கீழ் வந்தபின் 'இராஜராஜ சதுர்வேதி மங்கலம்' என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. (சோழர் ஆட்சியின் கீழ் தமிழ்ப் பௌத்தர்களால் நிர்வகிக்கப்பட்ட விகாரை இராசராசப் பெரும் பள்ளியெனப் பெயர்மாற்றம் செய்யப்படதுபோல்) அதன் பின்னர் அவரது மகன் இராஜேந்திரன் (கி.பி 1012 - கி.பி 1044) காலப்பகுதியில் திருகோணமலை நகரம், இராஜ ராஜ சதுர்வேதி மங்கலம்(கந்தளாய்) என்பவற்றை உள்ளடக்கிய பிரதேசம் 'இராஜேந்திர சோழவழநாடு' என அழைக்கப்பட்டிருக்கிறது.



கி.பி 1010 ஆம் ஆண்டி ல் இங்கு இராசேந்திர சோழனால் சிவன் கோவில் கட்டப்பட்டது. அப்புராதானக் கோயிலின் சிதைந்த பாகங்களைக்கொண்ட சிவன் பார்வதி சிலை, தூண் சிதைவுகள் , ஆவுடையார் போன்றவை இன்றும் அக்கோயிலின் வரலாற்றுத் தொன்மைதனை பறைசாற்றி நிற்கிறது.




வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் இங்கிருந்த ஆலயம் பிரசித்தமானதாகவும், பலர் ஒன்றுகூடி அமர்ந்து கலந்துரையாடக்கூடிய மண்டபங்களைக்கொண்ட பிரமாண்டமானதாகவும் இருந்திருக்கவேண்டுமென அறியமுடிகிறது. கந்தளாயிலுள்ள பேராறு எனுமிடத்தில் அமைந்திருக்கும் இவ்வாலச் சிதைவுகள் 1950ம் ஆண்டு காலப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அவ்விடத்தில் அமைக்கப்பட்ட சிவனாலயத்தையே மேலுள்ள படத்தில் காண்கிறீர்கள்.


இவ்வாலச் சூழலில் கண்டெடுக்கப்பட்ட பல சாசனங்களில் இருந்து இவ்வாலயத்தின் சிறப்பையும் இங்குவாழ்ந்த மக்களது சமய, பண்பாட்டு நடமுறைகளையும், இப்பிரதேசத்தில் நிலவிய அரசாட்சி பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது.

அங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் சொல்லும் செய்திகளின் சுருக்கம்.

01. இராஜராஜ சதுர்வேதி மங்கலத்தின் ஊராட்சி அமைப்பான பெருங்குறி(மகாசபை) பெருமக்கள் ஒரு இரவு ஒன்றுகூடி விக்கிரம சோழ வாய்க்கால் தொடர்பாக எடுத்த தீர்மானத்தின் பதிவுகளையே ஒரு கல்வெட்டு சொல்கிறது.இதனை ஆராய்ந்த கலாநிதி.கா.இந்திரபாலாவின் கருத்துப்படி கி.பி 1033 மாசி 13ம் திகதி/ கி.பி 1047 மாசி 10 ம் திகதி இம் மகாசபைக்கூட்டம் நிகழ்ந்திருக்கவேண்டுமெனக் கருதுகிறார்.

02. இங்குள்ள இன்னுமொரு சாசனம் முதலாம் விஜயபாகு தேவரின் 42 ம் ஆட்சியாண்டிலே எழுதப்பட்டது.(கி.பி 1097) நங்கைசானி என்னும் பிராமணப்பெண் தனது கணவனின் நினைவாக சதுர்வேத மங்கலத்து விஜயராஜ ஈஸ்வரம் என்னும் ஆலயத்தில் ஏற்படுத்திய அறக்கட்டளை பற்றிய விவரங்களை அது வர்ணிக்கிறது.

03.கி.பி 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது கி.பி 1103 ஆண்டுக்குரியதான கல்வெட்டில் கந்தளாய் என்றே அக்காலத்தில் இப்பிரதேசம் அழைக்கப்படதாக அறிய முடிகிறது. அத்துடன் பொலநறுவையை ஆட்சி புரிந்த விஜயபாகு தனது 37ம் ஆட்சியாண்டில் தானமளித்தான் என்பதையும் அறியமுடிகிறது. இதுவரை இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இதில்தான் முதன் முறையாக திருப்பள்ளியெழுச்சி, திருப்போனகம் என்னும் சொற்பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் குறிப்பிடுகிறார்.


இவை தவிர சோழ இலங்கேஸ்வரன், சோழர்களின் ஆட்சிமுறை, என்பனவற்றோடு தமிழர்களின் தொன்மையையும் ஆதாரப்படுத்தி நிற்கும் இச்சாசனங்கள் அரிய பொக்கிசங்களாகும்.

உசாத்தணை

வரலாற்றுத் திருகோணமலை - கனகசபாபதி சரவணபவன்

திருக்கோணமலை மாவட்ட திருத்தலங்கள் - பண்டிதர் இ.வடிவேல்

கட்டுரை- 'இலங்கையில் கிடைத்த தமிழ் சாசனத்தில் முதன்முதலாக திருப்பள்ளியெழுச்சியென்ற சொல்' - பேராசிரியர் சி. பத்மநாதன்

கட்டுரை - 'கிழக்கிலங்கையில் சீரழிந்துகொண்டிருக்கும் தமிழரின் தொன்மைச் சான்றுகள்' - கலாநிதி.ப.புஷ்பரெட்ணம்

தகவல் திரட்டுவதில் உதவியவர்கள் - கந்தளாய் சிவன்ஆலயக்குருக்கள், திரு.க.ரவிராஜன் (திருப்பணிச்சபை சிவன் ஆலயம்)
Share/Save/Bookmark